Tuesday, June 30, 2009

நீலநிற அங்கி



இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பெருமழை பெய்து ஓய்ந்த ஒரு காலை வேளையில் தான் அவனை முதன் முதல் சந்தித்தேன்.
ஆளை இழுத்தெடுக்கும் வசீகரமான முகம்.
அகன்ற துரு துரு விழிகள்.
மஞ்சளும் இளஞ்சிவப்பும் குழைத்த வர்ணம்.
‘உங்க பெயர் என்னடா’
வெட்கம் பிடுங்கித்தின்ன தன் டீ சேர்ட் முனையை முறுக்கி முறுக்கி என்னை ஒர் ஓரப்பார்வை பார்த்தான்.

அந்த முன்பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து இரண்டே மாதங்கள்.நான் கற்ற குழந்தை உளவியலுக்கும் அன்றாடம் குழந்தைகளோடு அனுபவிக்கும் சவால்களுக்குமிடையே பெரிதாய் ஒரு பள்ளம் விழுந்திருந்ததை உணர ஆரம்பித்திருந்தேன். காலையில் பூக்கூடை ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாய் விழும் ரோஜாக்கள் போல பிள்ளைகள் வகுப்பறைக்குள் வரும் காட்சியை கள்ளமாய் ரசித்துக்கொண்டிருப்பேன்.
குழந்தைகள் என்றால் யாருக்குத்தான் பிரியம் இல்லை?
என் வாழ்க்கையில் எந்தக் குழந்தையையும் அடிப்பதில்லை என்றொரு கொள்கை வேறு எனக்குள் முளைத்திருந்தது.

அப்போது எனக்கு திருமணப்பேச்சு வார்த்தையில் என் வீட்டார்கள் தீவிரமாக இறங்கியிருந்த காலம்.
மனசு ரணமாகும் போதெல்லாம் என் ஒரே ஆறுதல் என் பள்ளிக் குழந்தைகள் தான்.
வீட்டுக்குச்செல்லப்பிடிக்காமல் இன்னொரு குழந்தையாய் மாறி
வண்ணமும் வாசனையும் நிரம்பிய உலகத்துக்குள் என்னை ஆழ்த்திக் கொள்வது இயல்பாகிப்போனது.

முன் பள்ளியில் இருபது பிள்ளைகள் தான் இருந்தார்கள்.
எல்லோருமே கெட்டிக்காரச் சுட்டிக்குழந்தைகள்.
அதிலும் அஹ்மத் எல்லாவற்றையும் கப் என்று பிடித்துக்கொள்வான்.அவன் ஒரு தேர்ந்த அரசியல்வாதி போன்று மற்றப்பிள்ளைகளை அவனுக்கு கீழே வைத்திருப்பான்.
எனக்கு ஏனோ அவனை ரொம்பவுமே பிடிக்கும்.
ஆனால் எல்லாப்பிள்ளைகளையும் போலத்தான் அவனையும் நடத்தினேன்.

குழந்தைகளுக்கிடையில் சண்டை வரும் நேரங்களில் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினை போல சமாதானப்படுத்தி வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கும்.இவ்வளவுக்கும் சண்டையின் ஆரம்ப கர்த்தா ஒரு ஒரம் கடித்த அழிரப்பராயிருக்கும்.அல்லது வண்ணம் மக்கிப்போன சொக்லட் உறையாயிருக்கும்.எதிர்காலத்தில் பெற்றோரின் சொத்துக்கு எப்படி அடித்துக்கொள்வார்களோ என்று மனசுக்குள் புன்னகைத்துக்கொள்வேன்.

அஹ்மத் வன்முறையில் இறங்கினால் அடு ,தடி,குத்து தூள் பறக்கும்.
‘அஹ்மத்’என்று சமயங்களில் அன்பு குழைத்தும் சமயங்களில் உருக்கிய பார்வையோடும் அழைப்பேன்.வேதாளம் இறங்கி விடும்.

சில நாட்களில் அஹ்மத் தன் வீட்டு முற்றத்தில் பூக்கும் இன்னமும் கண் திறவாத மல்லிகை மொக்குகளை எனக்காகக் கொண்டு வருவான்.
பாதி கடித்த கொய்யா,பழைய பெர்பியூம் போத்தல்,உடைந்த பொம்மைக்கார் இப்படி ஏதாவது கிழமைக்கு இரு தடவையாவது எனக்குக் கிடைக்கும்.

சாப்பிடும் வேளையில் ‘மிஸ் ஆ எண்டு செல்லுங்கோ’என்று தன் நூடுல்ஸ் அல்லது சான்விச்சிலிருந்து எச்சில் துணுக்கொன்றை என் வாயில் திணிப்பான்.அப்படி செய்தால் போச்சு.இருபது லன்ச் பொக்ஸ் களிருந்து இருபது வலக்கரங்களால் வலிந்து ஊட்டப்படும் பாண் துண்டிலிருந்து பாற்சோறு வரையிலான பதார்த்தங்களை மெளனமாக பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

அன்று லேசான பூத்தூறலை வானம் வர்ஷித்துக் கொண்டிருந்தது.
அது ஆக்கப்பாட நேரம்.
வகுப்பறைக்குக் புதிதாக இளநீல வர்ணம் பூசியிருந்தார்கள்.
‘இப்போ எல்லொரும் இங்க பாருங்க…நான் வெள்ளதாளும் க்ரெயோன்ஸும் தரபோறேன்…
என்ன வரையப் போறீங்க’
ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி பேசி பிள்ளைகளை வரைதலுக்கு
ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தேன்.

‘மிஸ் நான் வீடு வரைரேன்’
‘மிஸ் மிஸ் நா எரோபிளேன்’
‘மிஸ் நான் எங்க டாடிய ட்ரோ பண்றேனே’
‘எனக்கேலா மிஸ்..எனக்கு கை வலிக்கிது..’
எல்லோர் அழைப்புக்கும் செவிசாய்த்து’வாவ்’ வெரி குட்’
‘கை வலி நிண்டதுக்கு பொறகு வரைங்க’
என்ற பதிலளித்து கொஞ்சமாய் களைத்திருந்தேன்.

அன்று காலையிலிருந்தே தலைவலி மண்டை குடைந்தது.வீட்டில் வேறு அன்று யாரோ பெண் பார்க்க வருவதாக இருந்தார்கள்.இரண்டு பனடோல் போட்டு
தண்ணீர் கொஞ்சம் குடிக்கலாமென்று ஹோலுக்கு வந்தால் அங்கே அஹ்மத்.

புதிதாய் வர்ணம் பூசிய சுவரில் சிவப்பும் செம்மஞ்சளுமாய் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான்.
நான் அதிர்ந்தேன்.

‘டேய்..என்னடா செஞ்ச….இரி உனக்கு நல்ல வேல செய்றேன்’
எனக்குள்ளிருந்து ஒரு மிருகம் அஹ்மதின் தோளை வலிக்கப்பற்றி இழுத்தது.நரம்புகள் புடைக்க அவனது பிஞ்சு கன்னத்தில் அறைந்தது.அவனின் மென்சிவப்பு நிறக்காது மடல்களைத் திருகியது.காதை இழுங்கிகொண்டு போய் அவனை ஒரு நாற்காலியில் உட்காரவைத்தது.

அஹ்மத் இன்னுமே அழவில்லை.
ஒரு பொட்டுக்கண்ணீரேனும் விடவில்லை என்பது எனக்கு அப்போது தான் உறைக்க கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற சிந்தனை எழ குற்ற உணர்வோடு அவனைப்பார்த்தேன்.அடிபட்டதை விட எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்பட்டது அவனைக் கடுமையாகப் பாதித்திருக்க வேண்டும்.

அவன் குனிந்த தலை நிமிரவே இல்லை.

அடுத்த நாள்….
அதற்கடுத்த நாள்…
எல்லாப்பிள்ளைகளும் எனக்கு காலைமுகமன் சொன்னார்கள்,
நான் காத்திருந்தேன்.
அஹ்மதோ அவன் கொண்டு வரும் மல்லி மொக்குகளோ வரவேயில்லை.

அந்த வாரத்தின் கடைசி நாள் அஹ்மதைப் பார்த்து வரலாமென்று அவன் வீட்டுக்கு சென்றேன்.
வீடு மூடி கேட்டில் பூட்டுத்தொங்கியது.
அஹ்மத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீடு பதறியபடி சொன்னது.

சிறுவர் வார்டில் அஹ்மதை கண்டு பிடித்து அருகில் சென்றேன்.
‘மிஸ்… என் கலர் பொக்ஸ யாருக்கும் குடுக்காதீங்க…
நான் இந்த டொக்டர் அங்கிள வரையணும்…’
சேலைன் ஏற்றப்பட்டிருந்த கையை ஆட்டியபடி பேசினான்.
‘இந்த ஒரு கெழமயா அவனுக்கு உங்களப் பத்தின கத தான் மிஸ்’அஹ்மதின் தாய் நின்றபடியே கதைக்கத் தொடங்கினார்.

அஹ்மதுக்கு டெங்கு காய்ச்சலாம்.பயப்படுவதற்கு ஒன்றுமில்லையாம்.இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணி விடுவாங்களாம்.
நான் கொண்டு போயிருந்த கரடி பொம்மையை அவனருகில் சாய்த்து வைத்து விட்டு கண்டொஸ் சொக்லேட்டையும் கையில் திணித்து விட்டு வந்த போது சத்தியமாய் எனக்குத் தெரியாது அது தான் அவனை கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.

வகுப்பறையில் ஊதா வண்ண க்ரேப் பேப்பரை சுருட்டி தாளில் வரைந்த கத்தரிக்காயின் மேல் எவ்வாறு ஒட்டுவது என்று செய்து காட்டிக்கொண்டிருந்த ஒரு இளவேனில் நாளில் அஹ்மதின் மரணச்செய்தி என்னை வந்தடைந்தது.

அஹ்மத் கடைசியாக வரைந்த கிறுக்கலை நோக்கி என்னையறியாமலே நகர்கிறேன், தொட்டுப்பார்க்கிறேன்.
நீல நிற அங்கியில் ஒர் உருவம்.ஆணா பெண்ணா என்று அனுமானிக்க முடியவில்லை.அதற்கு நேரே ஒரு கோணல் மாணலான ஹார்ட் சிவப்பு வண்ணத்தில் சிரித்தது.
உடைந்து உக்கார்ந்தேன்.
உள்ளுக்குள் சிட்டுக்குருவி ஒன்று வானிலிருந்து செங்குத்தாய் வீழ்ந்து செத்துப்போனது.

‘அஹ்மத் என்னை மன்னிப்பாயாடா?’
விசித்தழுகிறேன்.
விழிநீர்த்துளிகள் வந்து விழுந்தன என் நீலநிற அங்கியில்.

Monday, June 29, 2009

தோற்றுப்போகிறேன்.....




வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…

முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.

தோற்றுப்போகிறேன்…

ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…


அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…


விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….

உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!

Monday, June 15, 2009

தூங்காத நினைவுகள்!!!



தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்….
விம்மி விம்மி
வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!


விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!

ஒட்ட வைத்த‌
சிரிப்பு…
உலர்த்தி
வைத்த
விழியோரங்கள்…

என்ன
வாழ்க்கை இது!

இன்னும்
ஏற‌ வேண்டிய‌
இல‌க்குக‌ள்
இத‌ய‌ம் பிராண்டும்!!!


`நான்`
என‌க்கில்லாத‌
அவ‌ல‌ம்
அவ‌சர‌மாய்
நினைவுக்கு வ‌ரும்!!!


என் நேற்றுக்க‌ள்….
என் இன்றுக‌ள்….
என் நாளைக‌ள்….
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???

என்
மெளனமே…
என் செவிக‌ளுக்கு
இரைச்சலாயிருக்கிற‌து!!
இறைவா!!
எனக்கேன்
இத்த‌னை `சிற‌குக‌ள்`த‌நதாய்
த‌ங்க‌க் கூண்டில்
அடைத்து விட்டு???

Tuesday, June 30, 2009

நீலநிற அங்கி



இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பெருமழை பெய்து ஓய்ந்த ஒரு காலை வேளையில் தான் அவனை முதன் முதல் சந்தித்தேன்.
ஆளை இழுத்தெடுக்கும் வசீகரமான முகம்.
அகன்ற துரு துரு விழிகள்.
மஞ்சளும் இளஞ்சிவப்பும் குழைத்த வர்ணம்.
‘உங்க பெயர் என்னடா’
வெட்கம் பிடுங்கித்தின்ன தன் டீ சேர்ட் முனையை முறுக்கி முறுக்கி என்னை ஒர் ஓரப்பார்வை பார்த்தான்.

அந்த முன்பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து இரண்டே மாதங்கள்.நான் கற்ற குழந்தை உளவியலுக்கும் அன்றாடம் குழந்தைகளோடு அனுபவிக்கும் சவால்களுக்குமிடையே பெரிதாய் ஒரு பள்ளம் விழுந்திருந்ததை உணர ஆரம்பித்திருந்தேன். காலையில் பூக்கூடை ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாய் விழும் ரோஜாக்கள் போல பிள்ளைகள் வகுப்பறைக்குள் வரும் காட்சியை கள்ளமாய் ரசித்துக்கொண்டிருப்பேன்.
குழந்தைகள் என்றால் யாருக்குத்தான் பிரியம் இல்லை?
என் வாழ்க்கையில் எந்தக் குழந்தையையும் அடிப்பதில்லை என்றொரு கொள்கை வேறு எனக்குள் முளைத்திருந்தது.

அப்போது எனக்கு திருமணப்பேச்சு வார்த்தையில் என் வீட்டார்கள் தீவிரமாக இறங்கியிருந்த காலம்.
மனசு ரணமாகும் போதெல்லாம் என் ஒரே ஆறுதல் என் பள்ளிக் குழந்தைகள் தான்.
வீட்டுக்குச்செல்லப்பிடிக்காமல் இன்னொரு குழந்தையாய் மாறி
வண்ணமும் வாசனையும் நிரம்பிய உலகத்துக்குள் என்னை ஆழ்த்திக் கொள்வது இயல்பாகிப்போனது.

முன் பள்ளியில் இருபது பிள்ளைகள் தான் இருந்தார்கள்.
எல்லோருமே கெட்டிக்காரச் சுட்டிக்குழந்தைகள்.
அதிலும் அஹ்மத் எல்லாவற்றையும் கப் என்று பிடித்துக்கொள்வான்.அவன் ஒரு தேர்ந்த அரசியல்வாதி போன்று மற்றப்பிள்ளைகளை அவனுக்கு கீழே வைத்திருப்பான்.
எனக்கு ஏனோ அவனை ரொம்பவுமே பிடிக்கும்.
ஆனால் எல்லாப்பிள்ளைகளையும் போலத்தான் அவனையும் நடத்தினேன்.

குழந்தைகளுக்கிடையில் சண்டை வரும் நேரங்களில் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினை போல சமாதானப்படுத்தி வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கும்.இவ்வளவுக்கும் சண்டையின் ஆரம்ப கர்த்தா ஒரு ஒரம் கடித்த அழிரப்பராயிருக்கும்.அல்லது வண்ணம் மக்கிப்போன சொக்லட் உறையாயிருக்கும்.எதிர்காலத்தில் பெற்றோரின் சொத்துக்கு எப்படி அடித்துக்கொள்வார்களோ என்று மனசுக்குள் புன்னகைத்துக்கொள்வேன்.

அஹ்மத் வன்முறையில் இறங்கினால் அடு ,தடி,குத்து தூள் பறக்கும்.
‘அஹ்மத்’என்று சமயங்களில் அன்பு குழைத்தும் சமயங்களில் உருக்கிய பார்வையோடும் அழைப்பேன்.வேதாளம் இறங்கி விடும்.

சில நாட்களில் அஹ்மத் தன் வீட்டு முற்றத்தில் பூக்கும் இன்னமும் கண் திறவாத மல்லிகை மொக்குகளை எனக்காகக் கொண்டு வருவான்.
பாதி கடித்த கொய்யா,பழைய பெர்பியூம் போத்தல்,உடைந்த பொம்மைக்கார் இப்படி ஏதாவது கிழமைக்கு இரு தடவையாவது எனக்குக் கிடைக்கும்.

சாப்பிடும் வேளையில் ‘மிஸ் ஆ எண்டு செல்லுங்கோ’என்று தன் நூடுல்ஸ் அல்லது சான்விச்சிலிருந்து எச்சில் துணுக்கொன்றை என் வாயில் திணிப்பான்.அப்படி செய்தால் போச்சு.இருபது லன்ச் பொக்ஸ் களிருந்து இருபது வலக்கரங்களால் வலிந்து ஊட்டப்படும் பாண் துண்டிலிருந்து பாற்சோறு வரையிலான பதார்த்தங்களை மெளனமாக பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

அன்று லேசான பூத்தூறலை வானம் வர்ஷித்துக் கொண்டிருந்தது.
அது ஆக்கப்பாட நேரம்.
வகுப்பறைக்குக் புதிதாக இளநீல வர்ணம் பூசியிருந்தார்கள்.
‘இப்போ எல்லொரும் இங்க பாருங்க…நான் வெள்ளதாளும் க்ரெயோன்ஸும் தரபோறேன்…
என்ன வரையப் போறீங்க’
ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி பேசி பிள்ளைகளை வரைதலுக்கு
ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தேன்.

‘மிஸ் நான் வீடு வரைரேன்’
‘மிஸ் மிஸ் நா எரோபிளேன்’
‘மிஸ் நான் எங்க டாடிய ட்ரோ பண்றேனே’
‘எனக்கேலா மிஸ்..எனக்கு கை வலிக்கிது..’
எல்லோர் அழைப்புக்கும் செவிசாய்த்து’வாவ்’ வெரி குட்’
‘கை வலி நிண்டதுக்கு பொறகு வரைங்க’
என்ற பதிலளித்து கொஞ்சமாய் களைத்திருந்தேன்.

அன்று காலையிலிருந்தே தலைவலி மண்டை குடைந்தது.வீட்டில் வேறு அன்று யாரோ பெண் பார்க்க வருவதாக இருந்தார்கள்.இரண்டு பனடோல் போட்டு
தண்ணீர் கொஞ்சம் குடிக்கலாமென்று ஹோலுக்கு வந்தால் அங்கே அஹ்மத்.

புதிதாய் வர்ணம் பூசிய சுவரில் சிவப்பும் செம்மஞ்சளுமாய் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான்.
நான் அதிர்ந்தேன்.

‘டேய்..என்னடா செஞ்ச….இரி உனக்கு நல்ல வேல செய்றேன்’
எனக்குள்ளிருந்து ஒரு மிருகம் அஹ்மதின் தோளை வலிக்கப்பற்றி இழுத்தது.நரம்புகள் புடைக்க அவனது பிஞ்சு கன்னத்தில் அறைந்தது.அவனின் மென்சிவப்பு நிறக்காது மடல்களைத் திருகியது.காதை இழுங்கிகொண்டு போய் அவனை ஒரு நாற்காலியில் உட்காரவைத்தது.

அஹ்மத் இன்னுமே அழவில்லை.
ஒரு பொட்டுக்கண்ணீரேனும் விடவில்லை என்பது எனக்கு அப்போது தான் உறைக்க கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற சிந்தனை எழ குற்ற உணர்வோடு அவனைப்பார்த்தேன்.அடிபட்டதை விட எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்பட்டது அவனைக் கடுமையாகப் பாதித்திருக்க வேண்டும்.

அவன் குனிந்த தலை நிமிரவே இல்லை.

அடுத்த நாள்….
அதற்கடுத்த நாள்…
எல்லாப்பிள்ளைகளும் எனக்கு காலைமுகமன் சொன்னார்கள்,
நான் காத்திருந்தேன்.
அஹ்மதோ அவன் கொண்டு வரும் மல்லி மொக்குகளோ வரவேயில்லை.

அந்த வாரத்தின் கடைசி நாள் அஹ்மதைப் பார்த்து வரலாமென்று அவன் வீட்டுக்கு சென்றேன்.
வீடு மூடி கேட்டில் பூட்டுத்தொங்கியது.
அஹ்மத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீடு பதறியபடி சொன்னது.

சிறுவர் வார்டில் அஹ்மதை கண்டு பிடித்து அருகில் சென்றேன்.
‘மிஸ்… என் கலர் பொக்ஸ யாருக்கும் குடுக்காதீங்க…
நான் இந்த டொக்டர் அங்கிள வரையணும்…’
சேலைன் ஏற்றப்பட்டிருந்த கையை ஆட்டியபடி பேசினான்.
‘இந்த ஒரு கெழமயா அவனுக்கு உங்களப் பத்தின கத தான் மிஸ்’அஹ்மதின் தாய் நின்றபடியே கதைக்கத் தொடங்கினார்.

அஹ்மதுக்கு டெங்கு காய்ச்சலாம்.பயப்படுவதற்கு ஒன்றுமில்லையாம்.இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணி விடுவாங்களாம்.
நான் கொண்டு போயிருந்த கரடி பொம்மையை அவனருகில் சாய்த்து வைத்து விட்டு கண்டொஸ் சொக்லேட்டையும் கையில் திணித்து விட்டு வந்த போது சத்தியமாய் எனக்குத் தெரியாது அது தான் அவனை கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.

வகுப்பறையில் ஊதா வண்ண க்ரேப் பேப்பரை சுருட்டி தாளில் வரைந்த கத்தரிக்காயின் மேல் எவ்வாறு ஒட்டுவது என்று செய்து காட்டிக்கொண்டிருந்த ஒரு இளவேனில் நாளில் அஹ்மதின் மரணச்செய்தி என்னை வந்தடைந்தது.

அஹ்மத் கடைசியாக வரைந்த கிறுக்கலை நோக்கி என்னையறியாமலே நகர்கிறேன், தொட்டுப்பார்க்கிறேன்.
நீல நிற அங்கியில் ஒர் உருவம்.ஆணா பெண்ணா என்று அனுமானிக்க முடியவில்லை.அதற்கு நேரே ஒரு கோணல் மாணலான ஹார்ட் சிவப்பு வண்ணத்தில் சிரித்தது.
உடைந்து உக்கார்ந்தேன்.
உள்ளுக்குள் சிட்டுக்குருவி ஒன்று வானிலிருந்து செங்குத்தாய் வீழ்ந்து செத்துப்போனது.

‘அஹ்மத் என்னை மன்னிப்பாயாடா?’
விசித்தழுகிறேன்.
விழிநீர்த்துளிகள் வந்து விழுந்தன என் நீலநிற அங்கியில்.

Monday, June 29, 2009

தோற்றுப்போகிறேன்.....




வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…

முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.

தோற்றுப்போகிறேன்…

ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…


அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…


விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….

உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!

Monday, June 15, 2009

தூங்காத நினைவுகள்!!!



தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்….
விம்மி விம்மி
வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!


விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!

ஒட்ட வைத்த‌
சிரிப்பு…
உலர்த்தி
வைத்த
விழியோரங்கள்…

என்ன
வாழ்க்கை இது!

இன்னும்
ஏற‌ வேண்டிய‌
இல‌க்குக‌ள்
இத‌ய‌ம் பிராண்டும்!!!


`நான்`
என‌க்கில்லாத‌
அவ‌ல‌ம்
அவ‌சர‌மாய்
நினைவுக்கு வ‌ரும்!!!


என் நேற்றுக்க‌ள்….
என் இன்றுக‌ள்….
என் நாளைக‌ள்….
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???

என்
மெளனமே…
என் செவிக‌ளுக்கு
இரைச்சலாயிருக்கிற‌து!!
இறைவா!!
எனக்கேன்
இத்த‌னை `சிற‌குக‌ள்`த‌நதாய்
த‌ங்க‌க் கூண்டில்
அடைத்து விட்டு???