Thursday, August 27, 2009

தன்னந்தனியே....



கரை உடைத்த காட்டாறாய்
ஒரு
பெண்……

கொழுகொம்பினைச் சுற்றாத
கொடிமரமாய்
அவள்…
தனியே புறப்பட்டுச்செல்கிறாள்.

எத்தனையோ கரங்களால்
சமைக்கப்பட்ட
வீதிகளைத் தவிர்த்து

முதல் முறையாக அவள் பாதங்கள்
ஒற்றையடிப்பாதையில்
செல்கின்றன!

அவளதேயான
ஒற்றையடிப்பாதையில்…

Tuesday, August 11, 2009

தலைவாயிலில்...


ஆழ்கடலேழ் வான
உலகங்களின்
அதிபதியே!

என்னுயிரின்
ஒவ்வொரு துளிப்புகழும்
உனக்கே அர்ப்பணம்!

அளவிலா அன்பினூற்று
உன்னிடமிருந்து தானே
உற்பத்தி ஆகிறது!

கரை உடைக்கும்
கருணைக்கடலாளனே

என் வாழ்க்கை
உன்னை மட்டுமே
தொழுதுநிற்கிறது!

உன்னிடம் மட்டுமே
உதவி தேடுவதாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
மனசு!

அடர்கருங்காட்டில்
நெளிந்தோடும் நேர்பாதையில்
என் பாதங்கள்
படர்ந்து நிற்க
நீயல்லாமல் வேரெவர் சொல்லுவார்?


உன்
கோபச்சூட்டில் உதிர்ந்தவர்கள்
சென்ற வழியிலல்ல…

உன்
நேசக்குளிரில் உறைந்தவர்களின்
பாதத்தடங்களிலேயே
என் கால்களைப் பதித்து வை!

அல்குர்ஆன் கவிதைகளின் ஊற்றுக்கண்.
அல்குர்ஆனின் தலைவாயில் என்று அழைக்கப்படும் சூறா பாத்திஹாவை
என் விழிகளும் இதயமும் விளங்கியதால் முகிழ்த்த கவிதை இது.
இந்தக்கவிதை சூறா பாத்திஹாவின் மொழிபெயர்ப்பு அல்ல என்பதை மனதில் பதிக்க வேண்டுகிறேன்.

Monday, July 6, 2009

உயிரில் பூத்த தோழமை

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…

வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!

ஒரு
சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!

உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……

மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!

Tuesday, June 30, 2009

நீலநிற அங்கி



இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பெருமழை பெய்து ஓய்ந்த ஒரு காலை வேளையில் தான் அவனை முதன் முதல் சந்தித்தேன்.
ஆளை இழுத்தெடுக்கும் வசீகரமான முகம்.
அகன்ற துரு துரு விழிகள்.
மஞ்சளும் இளஞ்சிவப்பும் குழைத்த வர்ணம்.
‘உங்க பெயர் என்னடா’
வெட்கம் பிடுங்கித்தின்ன தன் டீ சேர்ட் முனையை முறுக்கி முறுக்கி என்னை ஒர் ஓரப்பார்வை பார்த்தான்.

அந்த முன்பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து இரண்டே மாதங்கள்.நான் கற்ற குழந்தை உளவியலுக்கும் அன்றாடம் குழந்தைகளோடு அனுபவிக்கும் சவால்களுக்குமிடையே பெரிதாய் ஒரு பள்ளம் விழுந்திருந்ததை உணர ஆரம்பித்திருந்தேன். காலையில் பூக்கூடை ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாய் விழும் ரோஜாக்கள் போல பிள்ளைகள் வகுப்பறைக்குள் வரும் காட்சியை கள்ளமாய் ரசித்துக்கொண்டிருப்பேன்.
குழந்தைகள் என்றால் யாருக்குத்தான் பிரியம் இல்லை?
என் வாழ்க்கையில் எந்தக் குழந்தையையும் அடிப்பதில்லை என்றொரு கொள்கை வேறு எனக்குள் முளைத்திருந்தது.

அப்போது எனக்கு திருமணப்பேச்சு வார்த்தையில் என் வீட்டார்கள் தீவிரமாக இறங்கியிருந்த காலம்.
மனசு ரணமாகும் போதெல்லாம் என் ஒரே ஆறுதல் என் பள்ளிக் குழந்தைகள் தான்.
வீட்டுக்குச்செல்லப்பிடிக்காமல் இன்னொரு குழந்தையாய் மாறி
வண்ணமும் வாசனையும் நிரம்பிய உலகத்துக்குள் என்னை ஆழ்த்திக் கொள்வது இயல்பாகிப்போனது.

முன் பள்ளியில் இருபது பிள்ளைகள் தான் இருந்தார்கள்.
எல்லோருமே கெட்டிக்காரச் சுட்டிக்குழந்தைகள்.
அதிலும் அஹ்மத் எல்லாவற்றையும் கப் என்று பிடித்துக்கொள்வான்.அவன் ஒரு தேர்ந்த அரசியல்வாதி போன்று மற்றப்பிள்ளைகளை அவனுக்கு கீழே வைத்திருப்பான்.
எனக்கு ஏனோ அவனை ரொம்பவுமே பிடிக்கும்.
ஆனால் எல்லாப்பிள்ளைகளையும் போலத்தான் அவனையும் நடத்தினேன்.

குழந்தைகளுக்கிடையில் சண்டை வரும் நேரங்களில் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினை போல சமாதானப்படுத்தி வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கும்.இவ்வளவுக்கும் சண்டையின் ஆரம்ப கர்த்தா ஒரு ஒரம் கடித்த அழிரப்பராயிருக்கும்.அல்லது வண்ணம் மக்கிப்போன சொக்லட் உறையாயிருக்கும்.எதிர்காலத்தில் பெற்றோரின் சொத்துக்கு எப்படி அடித்துக்கொள்வார்களோ என்று மனசுக்குள் புன்னகைத்துக்கொள்வேன்.

அஹ்மத் வன்முறையில் இறங்கினால் அடு ,தடி,குத்து தூள் பறக்கும்.
‘அஹ்மத்’என்று சமயங்களில் அன்பு குழைத்தும் சமயங்களில் உருக்கிய பார்வையோடும் அழைப்பேன்.வேதாளம் இறங்கி விடும்.

சில நாட்களில் அஹ்மத் தன் வீட்டு முற்றத்தில் பூக்கும் இன்னமும் கண் திறவாத மல்லிகை மொக்குகளை எனக்காகக் கொண்டு வருவான்.
பாதி கடித்த கொய்யா,பழைய பெர்பியூம் போத்தல்,உடைந்த பொம்மைக்கார் இப்படி ஏதாவது கிழமைக்கு இரு தடவையாவது எனக்குக் கிடைக்கும்.

சாப்பிடும் வேளையில் ‘மிஸ் ஆ எண்டு செல்லுங்கோ’என்று தன் நூடுல்ஸ் அல்லது சான்விச்சிலிருந்து எச்சில் துணுக்கொன்றை என் வாயில் திணிப்பான்.அப்படி செய்தால் போச்சு.இருபது லன்ச் பொக்ஸ் களிருந்து இருபது வலக்கரங்களால் வலிந்து ஊட்டப்படும் பாண் துண்டிலிருந்து பாற்சோறு வரையிலான பதார்த்தங்களை மெளனமாக பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

அன்று லேசான பூத்தூறலை வானம் வர்ஷித்துக் கொண்டிருந்தது.
அது ஆக்கப்பாட நேரம்.
வகுப்பறைக்குக் புதிதாக இளநீல வர்ணம் பூசியிருந்தார்கள்.
‘இப்போ எல்லொரும் இங்க பாருங்க…நான் வெள்ளதாளும் க்ரெயோன்ஸும் தரபோறேன்…
என்ன வரையப் போறீங்க’
ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி பேசி பிள்ளைகளை வரைதலுக்கு
ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தேன்.

‘மிஸ் நான் வீடு வரைரேன்’
‘மிஸ் மிஸ் நா எரோபிளேன்’
‘மிஸ் நான் எங்க டாடிய ட்ரோ பண்றேனே’
‘எனக்கேலா மிஸ்..எனக்கு கை வலிக்கிது..’
எல்லோர் அழைப்புக்கும் செவிசாய்த்து’வாவ்’ வெரி குட்’
‘கை வலி நிண்டதுக்கு பொறகு வரைங்க’
என்ற பதிலளித்து கொஞ்சமாய் களைத்திருந்தேன்.

அன்று காலையிலிருந்தே தலைவலி மண்டை குடைந்தது.வீட்டில் வேறு அன்று யாரோ பெண் பார்க்க வருவதாக இருந்தார்கள்.இரண்டு பனடோல் போட்டு
தண்ணீர் கொஞ்சம் குடிக்கலாமென்று ஹோலுக்கு வந்தால் அங்கே அஹ்மத்.

புதிதாய் வர்ணம் பூசிய சுவரில் சிவப்பும் செம்மஞ்சளுமாய் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான்.
நான் அதிர்ந்தேன்.

‘டேய்..என்னடா செஞ்ச….இரி உனக்கு நல்ல வேல செய்றேன்’
எனக்குள்ளிருந்து ஒரு மிருகம் அஹ்மதின் தோளை வலிக்கப்பற்றி இழுத்தது.நரம்புகள் புடைக்க அவனது பிஞ்சு கன்னத்தில் அறைந்தது.அவனின் மென்சிவப்பு நிறக்காது மடல்களைத் திருகியது.காதை இழுங்கிகொண்டு போய் அவனை ஒரு நாற்காலியில் உட்காரவைத்தது.

அஹ்மத் இன்னுமே அழவில்லை.
ஒரு பொட்டுக்கண்ணீரேனும் விடவில்லை என்பது எனக்கு அப்போது தான் உறைக்க கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற சிந்தனை எழ குற்ற உணர்வோடு அவனைப்பார்த்தேன்.அடிபட்டதை விட எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்பட்டது அவனைக் கடுமையாகப் பாதித்திருக்க வேண்டும்.

அவன் குனிந்த தலை நிமிரவே இல்லை.

அடுத்த நாள்….
அதற்கடுத்த நாள்…
எல்லாப்பிள்ளைகளும் எனக்கு காலைமுகமன் சொன்னார்கள்,
நான் காத்திருந்தேன்.
அஹ்மதோ அவன் கொண்டு வரும் மல்லி மொக்குகளோ வரவேயில்லை.

அந்த வாரத்தின் கடைசி நாள் அஹ்மதைப் பார்த்து வரலாமென்று அவன் வீட்டுக்கு சென்றேன்.
வீடு மூடி கேட்டில் பூட்டுத்தொங்கியது.
அஹ்மத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீடு பதறியபடி சொன்னது.

சிறுவர் வார்டில் அஹ்மதை கண்டு பிடித்து அருகில் சென்றேன்.
‘மிஸ்… என் கலர் பொக்ஸ யாருக்கும் குடுக்காதீங்க…
நான் இந்த டொக்டர் அங்கிள வரையணும்…’
சேலைன் ஏற்றப்பட்டிருந்த கையை ஆட்டியபடி பேசினான்.
‘இந்த ஒரு கெழமயா அவனுக்கு உங்களப் பத்தின கத தான் மிஸ்’அஹ்மதின் தாய் நின்றபடியே கதைக்கத் தொடங்கினார்.

அஹ்மதுக்கு டெங்கு காய்ச்சலாம்.பயப்படுவதற்கு ஒன்றுமில்லையாம்.இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணி விடுவாங்களாம்.
நான் கொண்டு போயிருந்த கரடி பொம்மையை அவனருகில் சாய்த்து வைத்து விட்டு கண்டொஸ் சொக்லேட்டையும் கையில் திணித்து விட்டு வந்த போது சத்தியமாய் எனக்குத் தெரியாது அது தான் அவனை கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.

வகுப்பறையில் ஊதா வண்ண க்ரேப் பேப்பரை சுருட்டி தாளில் வரைந்த கத்தரிக்காயின் மேல் எவ்வாறு ஒட்டுவது என்று செய்து காட்டிக்கொண்டிருந்த ஒரு இளவேனில் நாளில் அஹ்மதின் மரணச்செய்தி என்னை வந்தடைந்தது.

அஹ்மத் கடைசியாக வரைந்த கிறுக்கலை நோக்கி என்னையறியாமலே நகர்கிறேன், தொட்டுப்பார்க்கிறேன்.
நீல நிற அங்கியில் ஒர் உருவம்.ஆணா பெண்ணா என்று அனுமானிக்க முடியவில்லை.அதற்கு நேரே ஒரு கோணல் மாணலான ஹார்ட் சிவப்பு வண்ணத்தில் சிரித்தது.
உடைந்து உக்கார்ந்தேன்.
உள்ளுக்குள் சிட்டுக்குருவி ஒன்று வானிலிருந்து செங்குத்தாய் வீழ்ந்து செத்துப்போனது.

‘அஹ்மத் என்னை மன்னிப்பாயாடா?’
விசித்தழுகிறேன்.
விழிநீர்த்துளிகள் வந்து விழுந்தன என் நீலநிற அங்கியில்.

Monday, June 29, 2009

தோற்றுப்போகிறேன்.....




வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…

முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.

தோற்றுப்போகிறேன்…

ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…


அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…


விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….

உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!

Monday, June 15, 2009

தூங்காத நினைவுகள்!!!



தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்….
விம்மி விம்மி
வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!


விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!

ஒட்ட வைத்த‌
சிரிப்பு…
உலர்த்தி
வைத்த
விழியோரங்கள்…

என்ன
வாழ்க்கை இது!

இன்னும்
ஏற‌ வேண்டிய‌
இல‌க்குக‌ள்
இத‌ய‌ம் பிராண்டும்!!!


`நான்`
என‌க்கில்லாத‌
அவ‌ல‌ம்
அவ‌சர‌மாய்
நினைவுக்கு வ‌ரும்!!!


என் நேற்றுக்க‌ள்….
என் இன்றுக‌ள்….
என் நாளைக‌ள்….
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???

என்
மெளனமே…
என் செவிக‌ளுக்கு
இரைச்சலாயிருக்கிற‌து!!
இறைவா!!
எனக்கேன்
இத்த‌னை `சிற‌குக‌ள்`த‌நதாய்
த‌ங்க‌க் கூண்டில்
அடைத்து விட்டு???

Sunday, May 24, 2009

புத்தரின் விழிகள்


வன்னிக்காடுகளே…
எரியுங்கள்!!!

நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!

அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!

துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!


கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?

அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!


Friday, May 22, 2009

இரத்த ஆறும் வெற்றி ஓடமும்

கடுங்கோடை கழிந்து மழை வர்ஷிக்கத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி ஆரவாரம்.
மே 18 2009 விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து இலங்கையை மீட்டு எடுத்து விட்டதாகவும் ,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாகவும் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

பட்டாசு வெடிகளில் இலங்கையின் வீதிகள் அதிர்ந்தன.
‘கிரிபத்’எனும் பாற்சோறு சமைத்து இலங்கை பெரும்பான்மை மக்கள், நாட்டை காத்த ஜனாதிபதி பற்றி பெருமிதப்பட்டனர்.
வீடுகள் வாகனங்களில் தேசியக்கொடி பறந்தது.
ஆட்டமும் பாட்டமும் அதிகரிக்க புத்தரின் ஐந்து சீலங்களையும் பெளத்தர்கள் மறந்து விட்டதைத் தெளிவாகவே காண முடிந்தது.

இந்த ஆரவாரத்துக்குள் எமது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் பங்கெடுத்தது பயத்திலா அல்லது அறியாமையிலா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.எது எவ்வாறாயினும் எமது சுயகெளரவத்தையும் கொள்கையையும் ,சமூக நல்லிணக்கம் என்ற போர்வை போர்த்திய அடக்கியாள்கைக்காய் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்பது புரிதலுக்குரியது.
இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்’திற்காய் நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமானது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இரத்த ஆற்றின் மீதில் தான் இந்த வெற்றியின் ஓடம் மிதக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
விடுதலைப்புலிகளின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளின் எதிரொலிகளால் நாம் பாதிக்கப்பட்டதை நாம் இன்னும் மறந்து விடவில்லை.
எனினும் இந்தப்போரில் இலங்கை அரசின் குறி சமாதானமா இனச்சுத்தீகரிப்பா என்ற மாபெரும் கேள்வி மறுக்க முடியாமல் எழுகிறது.
சர்வதேசத்தின் அழுத்தங்களையும்,போரியல் விதிகளையும் மீறி பொதுமக்கள் அகதிகளாய் தஞ்சம் புகுந்திருந்த முகாம்களைக்கூட வெஞ்சம் கொண்டு தாக்கியழித்திருக்கிறது இலங்கை இராணுவம்.
வன்னியின் நீண்டு நெடித்துப் போன தெருக்களிலே மனிதம் மரித்துக் கிடக்கிறது.
பக்கம் சராத ஊடகவியலாளர்களுக்குக் கூட போர்ப்பிரதேசத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

சொல்லப்படும் இந்த சமாதானம் எவ்வளவு யதார்த்தமானது என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்.சிறுபான்மை மக்களின் உரிமைகளை அரசு எவ்வாறு மதித்து நடக்கப்போகிறது என்பதை நாம் அவதானத்துடன் நோக்கியவண்ணம் இருக்கிறோம்.ஏனெனில் யுத்தத்தில் எவரும் வெற்றியடைவதில்லை…அது வடுக்களையும் வலிகளையும் மட்டுமே விட்டுச்செல்கிறது.
கடந்த காலங்கள் நம்பிக்கை தருவதாக இல்லாத பட்சத்திலும் சிறுபான்மையினரின் கெளரவமும் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் வகையிலான திருப்திகரமான ஒரு தீர்வு யோசனை முன்வைக்கப்படுமாயின் அது வரவேற்புக்குரியது.
முற்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பட்டிருக்கும் எம் சகோதர தமிழர்களுக்காய் அனுதாபப்பெருமூச்சுக்களுக்கு மேலதிகமாக நாம் எதைச் செய்யப்போகிறோம்?
சிந்திக்க வேண்டிய வினா இது!!!

Thursday, February 12, 2009

ஓரங்குலமும் அசையேன்


என்
பேனாவை நிலத்தில்
குத்தி
உடை!!!

என் மடிக்கணணியை
பிடுங்கி
ஓங்கி நிலத்தில்
அடி!!!


என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்
நசுக்கு!!!

துப்பாக்கியை
தொண்டைக்குள்
குத்து!

அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்
காட்டு….


என்னை
சின்னாபின்னப்படுத்து….


என் குடும்பத்தை
இகழ்….

என் பாதையை
பெயர்த்து எடு…


நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை


என்
சோற்றில்
நஞ்சு வை

என் எழுத்துக்களில்
காறித்துப்பு



உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக
ஓரங்குலமும் அசையேன்.


என் உடல் கீறிய
ஒழுகும் குருதித்துளிகள்
எழுதும்
உனக்கெதிரான
தீர்ப்பை….



Saturday, February 7, 2009

மெளனத்தின் அழுத்தம்




உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு

சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்


மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை


கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு


இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?


உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


2009.02.06
shameela_yoosufali@copyright

Monday, February 2, 2009

தாயே நான் தாகித்திருக்கிறேன்




மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….

பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!


கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…


இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!


மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!


இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!


இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!


அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!


சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!


தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!


கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!


அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்


1998

Friday, January 30, 2009

பழைய கொப்பியிலிருந்து…

ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளை மறக்க முடியாதது போலவே என்னால் இந்தக் கட்டுரையையும் மறக்க முடிவதில்லை.
‘எனக்கு சிறகு முளைத்தால்…’என்ற தலைப்பில் பிஞ்சு வயதில் நான் வரைந்த கட்டுரை இது.
ஆண்டு 1 முதல் 5 வரை எனது வகுப்பாசிரியையாக இருந்த என் நேசத்துக்குரிய பெளஸியா அவர்களை நன்றிகளோடு நினைவு படுத்துகிறேன்.
என் மொழி வளத்துக்கும் ,நேர்த்தியான எழுத்துக்கும்,வாசிப்புத்தாகத்துக்கும் அடித்தாளமாய் இருந்து என்னை ஊக்குவித்த இன்னொரு தாய் அவர்.
சில விடயங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
மெளனத்தின் சப்தங்களோடு………

Monday, January 26, 2009

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !

இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !

நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !

அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !

ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !

உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !

ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி

தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,


உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.


ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…


இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…

காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…

நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு

‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…


சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…


உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…

கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…


தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…


இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…


புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்


அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?

பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?

ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…

விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்

பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்

மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…

அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.

வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்

மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!


இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!

யாஸீனே
எங்கிருக்கிறீர்?

மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???

இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???

பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.

.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©



Thursday, August 27, 2009

தன்னந்தனியே....



கரை உடைத்த காட்டாறாய்
ஒரு
பெண்……

கொழுகொம்பினைச் சுற்றாத
கொடிமரமாய்
அவள்…
தனியே புறப்பட்டுச்செல்கிறாள்.

எத்தனையோ கரங்களால்
சமைக்கப்பட்ட
வீதிகளைத் தவிர்த்து

முதல் முறையாக அவள் பாதங்கள்
ஒற்றையடிப்பாதையில்
செல்கின்றன!

அவளதேயான
ஒற்றையடிப்பாதையில்…

Tuesday, August 11, 2009

தலைவாயிலில்...


ஆழ்கடலேழ் வான
உலகங்களின்
அதிபதியே!

என்னுயிரின்
ஒவ்வொரு துளிப்புகழும்
உனக்கே அர்ப்பணம்!

அளவிலா அன்பினூற்று
உன்னிடமிருந்து தானே
உற்பத்தி ஆகிறது!

கரை உடைக்கும்
கருணைக்கடலாளனே

என் வாழ்க்கை
உன்னை மட்டுமே
தொழுதுநிற்கிறது!

உன்னிடம் மட்டுமே
உதவி தேடுவதாய்
ஒற்றைக்காலில் நிற்கிறது
மனசு!

அடர்கருங்காட்டில்
நெளிந்தோடும் நேர்பாதையில்
என் பாதங்கள்
படர்ந்து நிற்க
நீயல்லாமல் வேரெவர் சொல்லுவார்?


உன்
கோபச்சூட்டில் உதிர்ந்தவர்கள்
சென்ற வழியிலல்ல…

உன்
நேசக்குளிரில் உறைந்தவர்களின்
பாதத்தடங்களிலேயே
என் கால்களைப் பதித்து வை!

அல்குர்ஆன் கவிதைகளின் ஊற்றுக்கண்.
அல்குர்ஆனின் தலைவாயில் என்று அழைக்கப்படும் சூறா பாத்திஹாவை
என் விழிகளும் இதயமும் விளங்கியதால் முகிழ்த்த கவிதை இது.
இந்தக்கவிதை சூறா பாத்திஹாவின் மொழிபெயர்ப்பு அல்ல என்பதை மனதில் பதிக்க வேண்டுகிறேன்.

Monday, July 6, 2009

உயிரில் பூத்த தோழமை

ஒரு காத்திருப்பின்
இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!
மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்
பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்…

வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்
இயற்கை
சந்தோஷிக்கிறது!

ஒரு
சந்தோஷத்தின்
வேதனையை
ஒரு வேதனையின்
சந்தோஷத்தை
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்…
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!

உன்னை நானும்….
என்னை நீயுமாய்
பகிரும் பொழுதுகளில்
பசியில்லை…..
தாகமில்லை……

மனவெளியில்
மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்
போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்
தேவையில்லை
இதயம் போதுமே!!!

Tuesday, June 30, 2009

நீலநிற அங்கி



இந்த கதை ‘உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

பெருமழை பெய்து ஓய்ந்த ஒரு காலை வேளையில் தான் அவனை முதன் முதல் சந்தித்தேன்.
ஆளை இழுத்தெடுக்கும் வசீகரமான முகம்.
அகன்ற துரு துரு விழிகள்.
மஞ்சளும் இளஞ்சிவப்பும் குழைத்த வர்ணம்.
‘உங்க பெயர் என்னடா’
வெட்கம் பிடுங்கித்தின்ன தன் டீ சேர்ட் முனையை முறுக்கி முறுக்கி என்னை ஒர் ஓரப்பார்வை பார்த்தான்.

அந்த முன்பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து இரண்டே மாதங்கள்.நான் கற்ற குழந்தை உளவியலுக்கும் அன்றாடம் குழந்தைகளோடு அனுபவிக்கும் சவால்களுக்குமிடையே பெரிதாய் ஒரு பள்ளம் விழுந்திருந்ததை உணர ஆரம்பித்திருந்தேன். காலையில் பூக்கூடை ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாய் விழும் ரோஜாக்கள் போல பிள்ளைகள் வகுப்பறைக்குள் வரும் காட்சியை கள்ளமாய் ரசித்துக்கொண்டிருப்பேன்.
குழந்தைகள் என்றால் யாருக்குத்தான் பிரியம் இல்லை?
என் வாழ்க்கையில் எந்தக் குழந்தையையும் அடிப்பதில்லை என்றொரு கொள்கை வேறு எனக்குள் முளைத்திருந்தது.

அப்போது எனக்கு திருமணப்பேச்சு வார்த்தையில் என் வீட்டார்கள் தீவிரமாக இறங்கியிருந்த காலம்.
மனசு ரணமாகும் போதெல்லாம் என் ஒரே ஆறுதல் என் பள்ளிக் குழந்தைகள் தான்.
வீட்டுக்குச்செல்லப்பிடிக்காமல் இன்னொரு குழந்தையாய் மாறி
வண்ணமும் வாசனையும் நிரம்பிய உலகத்துக்குள் என்னை ஆழ்த்திக் கொள்வது இயல்பாகிப்போனது.

முன் பள்ளியில் இருபது பிள்ளைகள் தான் இருந்தார்கள்.
எல்லோருமே கெட்டிக்காரச் சுட்டிக்குழந்தைகள்.
அதிலும் அஹ்மத் எல்லாவற்றையும் கப் என்று பிடித்துக்கொள்வான்.அவன் ஒரு தேர்ந்த அரசியல்வாதி போன்று மற்றப்பிள்ளைகளை அவனுக்கு கீழே வைத்திருப்பான்.
எனக்கு ஏனோ அவனை ரொம்பவுமே பிடிக்கும்.
ஆனால் எல்லாப்பிள்ளைகளையும் போலத்தான் அவனையும் நடத்தினேன்.

குழந்தைகளுக்கிடையில் சண்டை வரும் நேரங்களில் பலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சினை போல சமாதானப்படுத்தி வைக்க பெரும்பாடு படவேண்டியிருக்கும்.இவ்வளவுக்கும் சண்டையின் ஆரம்ப கர்த்தா ஒரு ஒரம் கடித்த அழிரப்பராயிருக்கும்.அல்லது வண்ணம் மக்கிப்போன சொக்லட் உறையாயிருக்கும்.எதிர்காலத்தில் பெற்றோரின் சொத்துக்கு எப்படி அடித்துக்கொள்வார்களோ என்று மனசுக்குள் புன்னகைத்துக்கொள்வேன்.

அஹ்மத் வன்முறையில் இறங்கினால் அடு ,தடி,குத்து தூள் பறக்கும்.
‘அஹ்மத்’என்று சமயங்களில் அன்பு குழைத்தும் சமயங்களில் உருக்கிய பார்வையோடும் அழைப்பேன்.வேதாளம் இறங்கி விடும்.

சில நாட்களில் அஹ்மத் தன் வீட்டு முற்றத்தில் பூக்கும் இன்னமும் கண் திறவாத மல்லிகை மொக்குகளை எனக்காகக் கொண்டு வருவான்.
பாதி கடித்த கொய்யா,பழைய பெர்பியூம் போத்தல்,உடைந்த பொம்மைக்கார் இப்படி ஏதாவது கிழமைக்கு இரு தடவையாவது எனக்குக் கிடைக்கும்.

சாப்பிடும் வேளையில் ‘மிஸ் ஆ எண்டு செல்லுங்கோ’என்று தன் நூடுல்ஸ் அல்லது சான்விச்சிலிருந்து எச்சில் துணுக்கொன்றை என் வாயில் திணிப்பான்.அப்படி செய்தால் போச்சு.இருபது லன்ச் பொக்ஸ் களிருந்து இருபது வலக்கரங்களால் வலிந்து ஊட்டப்படும் பாண் துண்டிலிருந்து பாற்சோறு வரையிலான பதார்த்தங்களை மெளனமாக பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

அன்று லேசான பூத்தூறலை வானம் வர்ஷித்துக் கொண்டிருந்தது.
அது ஆக்கப்பாட நேரம்.
வகுப்பறைக்குக் புதிதாக இளநீல வர்ணம் பூசியிருந்தார்கள்.
‘இப்போ எல்லொரும் இங்க பாருங்க…நான் வெள்ளதாளும் க்ரெயோன்ஸும் தரபோறேன்…
என்ன வரையப் போறீங்க’
ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி பேசி பிள்ளைகளை வரைதலுக்கு
ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தேன்.

‘மிஸ் நான் வீடு வரைரேன்’
‘மிஸ் மிஸ் நா எரோபிளேன்’
‘மிஸ் நான் எங்க டாடிய ட்ரோ பண்றேனே’
‘எனக்கேலா மிஸ்..எனக்கு கை வலிக்கிது..’
எல்லோர் அழைப்புக்கும் செவிசாய்த்து’வாவ்’ வெரி குட்’
‘கை வலி நிண்டதுக்கு பொறகு வரைங்க’
என்ற பதிலளித்து கொஞ்சமாய் களைத்திருந்தேன்.

அன்று காலையிலிருந்தே தலைவலி மண்டை குடைந்தது.வீட்டில் வேறு அன்று யாரோ பெண் பார்க்க வருவதாக இருந்தார்கள்.இரண்டு பனடோல் போட்டு
தண்ணீர் கொஞ்சம் குடிக்கலாமென்று ஹோலுக்கு வந்தால் அங்கே அஹ்மத்.

புதிதாய் வர்ணம் பூசிய சுவரில் சிவப்பும் செம்மஞ்சளுமாய் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான்.
நான் அதிர்ந்தேன்.

‘டேய்..என்னடா செஞ்ச….இரி உனக்கு நல்ல வேல செய்றேன்’
எனக்குள்ளிருந்து ஒரு மிருகம் அஹ்மதின் தோளை வலிக்கப்பற்றி இழுத்தது.நரம்புகள் புடைக்க அவனது பிஞ்சு கன்னத்தில் அறைந்தது.அவனின் மென்சிவப்பு நிறக்காது மடல்களைத் திருகியது.காதை இழுங்கிகொண்டு போய் அவனை ஒரு நாற்காலியில் உட்காரவைத்தது.

அஹ்மத் இன்னுமே அழவில்லை.
ஒரு பொட்டுக்கண்ணீரேனும் விடவில்லை என்பது எனக்கு அப்போது தான் உறைக்க கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற சிந்தனை எழ குற்ற உணர்வோடு அவனைப்பார்த்தேன்.அடிபட்டதை விட எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தப்பட்டது அவனைக் கடுமையாகப் பாதித்திருக்க வேண்டும்.

அவன் குனிந்த தலை நிமிரவே இல்லை.

அடுத்த நாள்….
அதற்கடுத்த நாள்…
எல்லாப்பிள்ளைகளும் எனக்கு காலைமுகமன் சொன்னார்கள்,
நான் காத்திருந்தேன்.
அஹ்மதோ அவன் கொண்டு வரும் மல்லி மொக்குகளோ வரவேயில்லை.

அந்த வாரத்தின் கடைசி நாள் அஹ்மதைப் பார்த்து வரலாமென்று அவன் வீட்டுக்கு சென்றேன்.
வீடு மூடி கேட்டில் பூட்டுத்தொங்கியது.
அஹ்மத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீடு பதறியபடி சொன்னது.

சிறுவர் வார்டில் அஹ்மதை கண்டு பிடித்து அருகில் சென்றேன்.
‘மிஸ்… என் கலர் பொக்ஸ யாருக்கும் குடுக்காதீங்க…
நான் இந்த டொக்டர் அங்கிள வரையணும்…’
சேலைன் ஏற்றப்பட்டிருந்த கையை ஆட்டியபடி பேசினான்.
‘இந்த ஒரு கெழமயா அவனுக்கு உங்களப் பத்தின கத தான் மிஸ்’அஹ்மதின் தாய் நின்றபடியே கதைக்கத் தொடங்கினார்.

அஹ்மதுக்கு டெங்கு காய்ச்சலாம்.பயப்படுவதற்கு ஒன்றுமில்லையாம்.இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணி விடுவாங்களாம்.
நான் கொண்டு போயிருந்த கரடி பொம்மையை அவனருகில் சாய்த்து வைத்து விட்டு கண்டொஸ் சொக்லேட்டையும் கையில் திணித்து விட்டு வந்த போது சத்தியமாய் எனக்குத் தெரியாது அது தான் அவனை கடைசியாகப் பார்க்கிறேன் என்பது.

வகுப்பறையில் ஊதா வண்ண க்ரேப் பேப்பரை சுருட்டி தாளில் வரைந்த கத்தரிக்காயின் மேல் எவ்வாறு ஒட்டுவது என்று செய்து காட்டிக்கொண்டிருந்த ஒரு இளவேனில் நாளில் அஹ்மதின் மரணச்செய்தி என்னை வந்தடைந்தது.

அஹ்மத் கடைசியாக வரைந்த கிறுக்கலை நோக்கி என்னையறியாமலே நகர்கிறேன், தொட்டுப்பார்க்கிறேன்.
நீல நிற அங்கியில் ஒர் உருவம்.ஆணா பெண்ணா என்று அனுமானிக்க முடியவில்லை.அதற்கு நேரே ஒரு கோணல் மாணலான ஹார்ட் சிவப்பு வண்ணத்தில் சிரித்தது.
உடைந்து உக்கார்ந்தேன்.
உள்ளுக்குள் சிட்டுக்குருவி ஒன்று வானிலிருந்து செங்குத்தாய் வீழ்ந்து செத்துப்போனது.

‘அஹ்மத் என்னை மன்னிப்பாயாடா?’
விசித்தழுகிறேன்.
விழிநீர்த்துளிகள் வந்து விழுந்தன என் நீலநிற அங்கியில்.

Monday, June 29, 2009

தோற்றுப்போகிறேன்.....




வாழ்வெனும் பெரு நிலப்பிரப்பில்
மீண்டுமொரு முறை
தனியளாகிறேன்…

முடிவுறாத ஓட்டத்தில்
களைத்துயிர்
சாய்கிறேன்.

தோற்றுப்போகிறேன்…

ஒரு
ரசிப்பிற்குரிய கர்வம்
சிறகுடைந்து வீழ்கிறது…


அழத்திராணியழிந்த இதயம்
உள்ளுக்குள்
வலிச்சிலுவையில்
கைகளை நீட்டியபடி…


விழிகளை மூடினால்
சுடுகிறது
தணல்துண்டிமைகள்….

உன்
சந்தோஷங்களுக்காக
மொத்தமாய்
நான் தோற்றுப்போகிறேன்!!!

Monday, June 15, 2009

தூங்காத நினைவுகள்!!!



தூங்காத நினைவுகள்
மெல்லிய தாலாட்டாய்….
விம்மி விம்மி
வெளிவராது…
உள்ளுக்குள் அடங்கிப் போகிறது
பெருமூச்சு!!!


விழி கீறி
குபுக்கென வெளிவரப்பார்க்கும்
நீர்த்துளி
தணிக்கை செய்யப்படுகிறது!!!

ஒட்ட வைத்த‌
சிரிப்பு…
உலர்த்தி
வைத்த
விழியோரங்கள்…

என்ன
வாழ்க்கை இது!

இன்னும்
ஏற‌ வேண்டிய‌
இல‌க்குக‌ள்
இத‌ய‌ம் பிராண்டும்!!!


`நான்`
என‌க்கில்லாத‌
அவ‌ல‌ம்
அவ‌சர‌மாய்
நினைவுக்கு வ‌ரும்!!!


என் நேற்றுக்க‌ள்….
என் இன்றுக‌ள்….
என் நாளைக‌ள்….
யாரிடம்
அடகு வைக்கப்பட்டிருக்கின்றன???

என்
மெளனமே…
என் செவிக‌ளுக்கு
இரைச்சலாயிருக்கிற‌து!!
இறைவா!!
எனக்கேன்
இத்த‌னை `சிற‌குக‌ள்`த‌நதாய்
த‌ங்க‌க் கூண்டில்
அடைத்து விட்டு???

Sunday, May 24, 2009

புத்தரின் விழிகள்


வன்னிக்காடுகளே…
எரியுங்கள்!!!

நீண்டு நெடித்த
தெருக்களே…
நொடித்துப்போங்கள்!!!

அதோ…
அப்பம் சுட்டே
சுருங்கிப்போன
ஒரு மூதாட்டியின்
நொருங்கிப்போன
சடலம்!!!

துண்டுப்பாண் அணைத்த
பிஞ்சுக்கைகள்
துண்டித்துக்கிடக்கின்றன!!!

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!

நான்
ஓர் இலங்கையள்…
வெட்கிக்கிறேன்…
கையாலாகாத
என் பேனா
தலை குனிகிறது!!!


கொடுமணல் வெளியில்
மழைத்துளி
வாழுமா?

அரசிலை வேரில்
இரத்த ஆறுகளா?

புத்தரின் விழிகள்
மூடியே
இருக்கின்றன!!!


Friday, May 22, 2009

இரத்த ஆறும் வெற்றி ஓடமும்

கடுங்கோடை கழிந்து மழை வர்ஷிக்கத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையில் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி ஆரவாரம்.
மே 18 2009 விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து இலங்கையை மீட்டு எடுத்து விட்டதாகவும் ,விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்று விட்டதாகவும் இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

பட்டாசு வெடிகளில் இலங்கையின் வீதிகள் அதிர்ந்தன.
‘கிரிபத்’எனும் பாற்சோறு சமைத்து இலங்கை பெரும்பான்மை மக்கள், நாட்டை காத்த ஜனாதிபதி பற்றி பெருமிதப்பட்டனர்.
வீடுகள் வாகனங்களில் தேசியக்கொடி பறந்தது.
ஆட்டமும் பாட்டமும் அதிகரிக்க புத்தரின் ஐந்து சீலங்களையும் பெளத்தர்கள் மறந்து விட்டதைத் தெளிவாகவே காண முடிந்தது.

இந்த ஆரவாரத்துக்குள் எமது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் பங்கெடுத்தது பயத்திலா அல்லது அறியாமையிலா என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.எது எவ்வாறாயினும் எமது சுயகெளரவத்தையும் கொள்கையையும் ,சமூக நல்லிணக்கம் என்ற போர்வை போர்த்திய அடக்கியாள்கைக்காய் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்பது புரிதலுக்குரியது.
இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்’திற்காய் நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமானது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இரத்த ஆற்றின் மீதில் தான் இந்த வெற்றியின் ஓடம் மிதக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
விடுதலைப்புலிகளின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளின் எதிரொலிகளால் நாம் பாதிக்கப்பட்டதை நாம் இன்னும் மறந்து விடவில்லை.
எனினும் இந்தப்போரில் இலங்கை அரசின் குறி சமாதானமா இனச்சுத்தீகரிப்பா என்ற மாபெரும் கேள்வி மறுக்க முடியாமல் எழுகிறது.
சர்வதேசத்தின் அழுத்தங்களையும்,போரியல் விதிகளையும் மீறி பொதுமக்கள் அகதிகளாய் தஞ்சம் புகுந்திருந்த முகாம்களைக்கூட வெஞ்சம் கொண்டு தாக்கியழித்திருக்கிறது இலங்கை இராணுவம்.
வன்னியின் நீண்டு நெடித்துப் போன தெருக்களிலே மனிதம் மரித்துக் கிடக்கிறது.
பக்கம் சராத ஊடகவியலாளர்களுக்குக் கூட போர்ப்பிரதேசத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

சொல்லப்படும் இந்த சமாதானம் எவ்வளவு யதார்த்தமானது என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்.சிறுபான்மை மக்களின் உரிமைகளை அரசு எவ்வாறு மதித்து நடக்கப்போகிறது என்பதை நாம் அவதானத்துடன் நோக்கியவண்ணம் இருக்கிறோம்.ஏனெனில் யுத்தத்தில் எவரும் வெற்றியடைவதில்லை…அது வடுக்களையும் வலிகளையும் மட்டுமே விட்டுச்செல்கிறது.
கடந்த காலங்கள் நம்பிக்கை தருவதாக இல்லாத பட்சத்திலும் சிறுபான்மையினரின் கெளரவமும் இருப்பும் உறுதிப்படுத்தப்படும் வகையிலான திருப்திகரமான ஒரு தீர்வு யோசனை முன்வைக்கப்படுமாயின் அது வரவேற்புக்குரியது.
முற்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பட்டிருக்கும் எம் சகோதர தமிழர்களுக்காய் அனுதாபப்பெருமூச்சுக்களுக்கு மேலதிகமாக நாம் எதைச் செய்யப்போகிறோம்?
சிந்திக்க வேண்டிய வினா இது!!!

Thursday, February 12, 2009

ஓரங்குலமும் அசையேன்


என்
பேனாவை நிலத்தில்
குத்தி
உடை!!!

என் மடிக்கணணியை
பிடுங்கி
ஓங்கி நிலத்தில்
அடி!!!


என்
குரல்வளையை
உன் விரலிடுக்கில்
நசுக்கு!!!

துப்பாக்கியை
தொண்டைக்குள்
குத்து!

அநீதிக்கெதிராய் கொதிதெழுந்தவர்களின்
சடலங்களைக்
காட்டு….


என்னை
சின்னாபின்னப்படுத்து….


என் குடும்பத்தை
இகழ்….

என் பாதையை
பெயர்த்து எடு…


நான் வாழும்
குடிசைக்கு
நெருப்பு வை


என்
சோற்றில்
நஞ்சு வை

என் எழுத்துக்களில்
காறித்துப்பு



உன்
எதேச்சதிகாரத்துக்கெதிராக
ஓரங்குலமும் அசையேன்.


என் உடல் கீறிய
ஒழுகும் குருதித்துளிகள்
எழுதும்
உனக்கெதிரான
தீர்ப்பை….



Saturday, February 7, 2009

மெளனத்தின் அழுத்தம்




உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


கழுத்து நரம்பை
புடைக்கச்செய்யும்
கோபம் மறைத்து…
காதுமடல் வரை
நீண்ட சிரிப்பு

சோகம் …
வேதனை…
வலி…
சுமந்து
மரத்துப்போன
உள்ளம்


மரணத்தின் வலியா
இது
வாழ்க்கையின் வலியா
இன்னும்
புரியவில்லை


கடுங்குளிரிலும்
வேர்த்து அவியும்
மனசு


இணைய முடியாத
தண்டவாளங்களா
நாம்?


உடைந்து போகின்ற
சப்தத்தின் சில்லுகளை
விட
மெளனத்தின் அழுத்தம்
எனக்கு பிரியம்.


2009.02.06
shameela_yoosufali@copyright

Monday, February 2, 2009

தாயே நான் தாகித்திருக்கிறேன்




மரணக்கோப்பையில்
வாழ்க்கை
வழிந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடம்…
இரவும்
இன்னுமொரு பகல் தான்!

தாயே
நான் தாகித்திருக்கிறேன்!!

‘பலஸ்தீன் எங்கள் பூமி’
குருதிச்சொட்டுக்கள்
குறிப்பெடுக்கின்றன….

பலஸ்தீன நீர்ச்சொட்டுக்கள்
இஸ்ரேலிய சஹாராவில்
அவிழ்ந்து விழுகின்றன!

நரம்புகளிலிருந்து
உயிர்
தெறிக்கத்துடிக்கிறது!


கொதித்துக் கொண்டிருந்த
இரத்தப்புயல்…
பிடறிகளை
புடைத்துக்கொண்டு
புறப்பட்டு விட்டது!

அன்னையே
அழாதீர்கள்…


இனிமையான
எங்கள் நாட்கள்
களவாடப்பட்டு விட்டன.

எப்போது
இதயத்தை
ஈமானிய ஒளியால்
இறுக்கிக்கொண்டேனோ
அப்போதே
ஜிஹாதின் களத்தில்
என்னுயிரை
இறக்கிக்கொண்டேன்!


மலர்களையல்ல
முற்களை முத்தமிடத்தான்
என்
இளமை உதடு
துடிக்கிறது!


இற்றுப்போன
‘நேற்று’க்களிலும்
நம்பிக்கையில்லாத
‘நாளை’களிலும் அல்ல
இந்த நிமிட
‘இன்று’களில் தான்
எதிர்காலம்
வாழ்கிறது!


இப்போதெல்லாம்
பலஸ்தீனத்துப் பூவுக்குள்ளும்
பூகம்பச்சிரிப்பு!!


அன்னையே
அழாதீர்கள்

அடிமை தேசத்து
ஆட்சியாளனை
விட
சுதந்திர தேசத்தின்
ஷஹீதாகிறேன்!


சன்னம் துளைத்த
சடலங்களின் விழிகளில்
விடுதலை ராகம்!


தாயே
நான் தாகித்திருக்கிறேன்

இருட்டை
விசாரிக்கும்
வெளிச்சம் நான்!


கடைசித் துளி
உயிர்
காயும் வரைக்கும்
இந்த உணர்ச்சிகள்
மூர்ச்சிக்காது!


அன்னையே
அழாதீர்கள்

பலஸ்தீனின்
ஒவ்வொரு அபாபீலும்
பிஞ்சுக்கற்களைப்
பொத்திப்பிறக்கும்
காலம் வரும்…

காஸா தீரம்
கடற்பறவைகளின் கானம்…
தக்பீரின் நாதம்
இதோ
என் அருகில்


1998

Friday, January 30, 2009

பழைய கொப்பியிலிருந்து…

ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளை மறக்க முடியாதது போலவே என்னால் இந்தக் கட்டுரையையும் மறக்க முடிவதில்லை.
‘எனக்கு சிறகு முளைத்தால்…’என்ற தலைப்பில் பிஞ்சு வயதில் நான் வரைந்த கட்டுரை இது.
ஆண்டு 1 முதல் 5 வரை எனது வகுப்பாசிரியையாக இருந்த என் நேசத்துக்குரிய பெளஸியா அவர்களை நன்றிகளோடு நினைவு படுத்துகிறேன்.
என் மொழி வளத்துக்கும் ,நேர்த்தியான எழுத்துக்கும்,வாசிப்புத்தாகத்துக்கும் அடித்தாளமாய் இருந்து என்னை ஊக்குவித்த இன்னொரு தாய் அவர்.
சில விடயங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
மெளனத்தின் சப்தங்களோடு………

Monday, January 26, 2009

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !

இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !

நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !

அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !

ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !

உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !

ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி

தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,


உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.


ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…


இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…

காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…

நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு

‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…


சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…


உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…

கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…


தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…


இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…


புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்


அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?

பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?

ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…

விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்

பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்

மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…

அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.

வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்

மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!


இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!

யாஸீனே
எங்கிருக்கிறீர்?

மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???

இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???

பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.

.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©